mardi 28 août 2012

புலவரில் சிறந்தவா்


எடுப்பு

புலவரிற் சிறந்தவர் இலக்குவனார்! அவர்
பூந்தமிழ்க் கண்டெனப் பலபுகழ்வார்!
                                  (புலவரில்)

தொடுப்பு

இலக்கிய இலக்கணக் காவலராம்! அவர்
இன்தமிழ்ப் பேச்சினில் நாவலராம்!
                                  (புலவரில்)

முடிப்பு

திருக்குறள் தெளிவுரை திறம்பட வடித்தார்! உயர்
தென்மொழி ஆய்வுகள் தேனெனக் கொடுத்தார்!
நெருக்கற நுழைந்திடும் இந்தியைத் தடுத்தார்! நம்
நிலத்திடைச் செந்தமிழ் நிலவிடத் துடித்தார்!
                                  (புலவரில்)

களிதமிழ் கமழ்ந்திடக் கருத்துகள் மொழிந்தார்! தொல்
காப்பியம் மணந்திடக் கனியுரை பொழிந்ததர்!
தெளிதமிழ் உயர்ந்திடச் சிந்தையில் விழைந்தார்! நம்
செம்மொழி காத்திடச் சிறைதனில் நுழைந்தார்!
                                  (புலவரில்)

Aucun commentaire:

Enregistrer un commentaire